Showing posts with label சிறுவர் பாடல்கள். Show all posts
Showing posts with label சிறுவர் பாடல்கள். Show all posts

Tuesday, November 17, 2009

பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்

பொம்மையம்மா பொம்மை..!
நான் விளையாடும் பொம்மை..!
அசைந்து அசைந்து போகும்
அழகு யானை பொம்மை..!

தத்தித் தத்தி தாவும்
குட்டி முயல் பொம்மை..!
குட்டிக் கரணம் போடும்
குட்டிக் குரங்கு பொம்மை..!

கர்... புர்னு... கத்தும்
கறுப்புக் கரடி பொம்மை..!
கடக்கு... முடக்குன்னு போகும்
கட்டை வண்டி பொம்மை..!

நன்றாய் வாலை ஆட்டும்
நாய்க்குட்டி பொம்மை..!
நல்ல நல்ல பொம்மை
நான் விளையாடும் பொம்மை..!

(எனது எல்.கே.ஜி., வகுப்பு ஆசிரியை கேட்டுக் கொண்டதற்கிணங்க, எனது தந்தை எழுதித் தந்தை பொம்மை குறித்த சிறுவர் பாடல்...)

Tuesday, August 12, 2008

பள்ளிக்கூடம் போகலாம் வா பாப்பா... - சிறுவர் பாடல்

பள்ளிக்கூடம் போகலாம் வா பாப்பா...
நல்ல பாடங்களைப் படிக்கலாம் வா பாப்பா...
புது நண்பர்கள் கிடைப்பர் வா பாப்பா...
புதிய உலகத்தைக் காண வா பாப்பா..!

வீட்டில் இருந்தது போதும் பாப்பா...
விரைந்து நீ எழுந்து வா பாப்பா...
ஒழுங்காய் தினமும் பள்ளி சென்று
ஒழுக்கமதை கற்போம் வா பாப்பா...

தாய் தமிழ் கற்கலாம் வா பாப்பா...
தரணி மீதில் நடந்திட வா பாப்பா...
இலக்கணத்தை கற்போம் வா பாப்பா..
இலக்கணமாய் வாழ்வோம் வா பாப்பா..!

இலக்கியம் கற்போம் வா பாப்பா...
இயல்பாய் வாழ்வோம் வா பாப்பா
இயற்கையை அறிவோம் வா பாப்பா...
அதனுடன் இயைவோம் வா பாப்பா..

அயல் மொழி கற்போம் வா பாப்பா...
அகிலத்தை அறிவோம் வா பாப்பா..!
கணிதம் படிப்போம் வா பாப்பா..!
கணக்காய் வாழ்வோம் வா பாப்பா..!

அறிவியல் படிப்போம் வா பாப்பா...
அறிவைப் பெருக்கொவோம் வா பாப்பா..!
வரலாறு படிப்போம் வா பாப்பா..!
வாழ்ந்து காட்டுவோம் வா பாப்பா..!

புவியியல் படிப்போம் வா பாப்பா..!
பல புதிர்களை அவிழ்ப்போம் வா பாப்பா..!
வானியல் படிப்போம் வா பாப்பா..!
வானில் நடப்போம் வா பாப்பா..!

கடலியல் படிப்போம் வா பாப்பா..!
கருத்தாய் வாழ்வோம் வா பாப்பா..!
உடலியல் படிப்போம் வா பாப்பா..!
நோயின்றி வாழ்வோம் வா பாப்பா..!

கல்வி கற்க வா பாப்பா..!
கற்பூரமாய் நீ படி பாப்பா..!
பாடம் படிக்க வா பாப்பா..!
பகுத்தறிவை வளர்க்க வா பாப்பா..!

Wednesday, May 28, 2008

குயிலே.. குயிலே... குயிலக்கா...! - குழந்தைப் பாடல்


குயிலே.. குயிலே... குயிலக்கா..!
நீ கூவும் குரல் தேனக்கா...!
வானம்பாடி போலவே நீ தினமும்
'கானம்'பாடி சுற்றுகிறாய்..!

இவ்வளவு அழகாய் பாடுவற்கு
எங்கே நீ கற்றுக் கொண்டாய்..!
நானும் உன்போல் பாடுவதற்கு
எனக்கும் சொல்லேன் குயிலக்கா..!

உன் நிறம் தான் கறுப்பக்கா..!
உண் கண் நிறமோ சிவப்பக்கா..!
உன் உருவம் சிறிதே ஆனாலும்
உன் குரல் வளமோ அழகக்கா..!

நீ தூரத்தில் கூவும் குரல் கேட்டு
என் செல்லத் தம்பி விளம்புகிறான்..!
யாரண்ணா அங்கு பாடுவது
என் முன்னே வந்து பாடச் சொல்..!

நீங்கள் வாழ மரமில்லை..?
மரங்களை வைக்க எங்களுக்கு மனமில்லை
வனங்கள் மறைந்து போயினவே
என வேறிடம் செல்ல போகிறாயோ...!

எங்கே நீ பறந்து சென்றாலும்
எங்களை நீ மறவாதே..!
நீ வாழ நாங்கள் அரும் பெரும்
மரங்களை மீண்டும் வளர்கின்றோம்..!

வனங்கள் இல்லை என்று வாடாதே..!
மீண்டும் வனங்களை உருவாக்குகின்றோம்..!
இருப்பிடம் தேடி வேறிடம் போகாதே
உன்னை இரு கரம் கூப்பி கேட்கின்றோம்..!

-க. ஆதித்தன். 08.04.2008
(17.05.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)

தீபாவளி... தீபாவளிதான்...! -குழந்தைப் பாடல்

தீபாவளி... தீபாவளிதான்
தித்திக்கும் தீபாவளிதான்
புத்தாடை தீபாவளிதான்
வெடி பட்டாசு தீபாவளிதான்...

அதிகாலையிலே எழுந்து
அதிர்வேட்டை போட்டு
அருகிலுள்ளோரை எழுப்பும்
ஆரவார தீபாவளிதான்...

புத்தம் புது ஆடைகளை
மகிழ்வுடன் அணிந்து கொண்டு
உறவுகளோடு வீதிவலம் வருகின்ற
விருப்பமான தீபாவளிதான்...

பூந்தி, லட்டு, ஜிலேபி, முறுக்கு,
வடை, அதிரசம் என அனைத்து
வகை பலகாரங்களையும் சாப்பிட
சுவையான தீபாவளிதான்...

பூத்துச் சிரிக்கும் மத்தாப்பு
வானை மிரட்டும் வானவெடி
சந்தியில் வைக்கும் சரவெடி என
டமால்... டுமீல்... தீபாவளிதான்...

தம்பி பிடிக்க கம்பி மத்தாப்பு
தங்கை வைக்க புஸ்வானம்
அக்கா வைக்கும் லட்சுமி வெடி
என அசர வைக்கும் தீபாவளிதான்...

அத்தனை ரக பட்டாசுகளும்
அழகழகாக வெடிப்பதால்
நம் அனைவரின் மனதிலும்
உற்சாகம் கொடுக்கும் தீபாவளிதான்...

விலங்குகளுக்கும் தொந்தரவின்றி
முதியோர்களுக்கும் தொந்தரவின்றி
நோயாளிகளுக்கும் தொந்தரவின்றி
பட்டாசு வெடித்தால் பட்டான தீபாவளிதான்...

குடிசைகள் இருக்கும் பார்த்துக் கொள்
பெட்ரோல் நிலையங்கள் இருக்கும் பார்த்துக் கொள்
கொளுத்தும் போது கவனம் கொண்டால்
கொண்டாட்டமான தீபாவளிதான்...

-மோ. கணேசன்.
(03.11.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)

'உம்'கார ஆத்திச்சூடி!


ன்பாக இருக்கனும்...
சைகளை அடக்கனும்...
னிமையாகப் பழகனும்...
கை குணம் வளர்க்கனும்...
ண்மையையே பேசனும்...
க்கத்தோடு படிக்கனும்...
ளிமையாக இருக்கனும்...
ற்றம் பெற உழைக்கனும்...
யங்களைப் போக்கனும்...
ற்றுமையாய் வாழனும்...
டி விளையாடனும்...
ஓளவை வழி நடக்கனும்...
தே வாழ்வின் இலக்கணம்..!

-மோ. கணேசன். 29.9.07

நாமும் கலாம் ஆ'கலாம்' - குழந்தைப் பாடல்


பள்ளிக்கூடம் போ'கலாம்'
பகுத்தறிவை வளர்க்'கலாம்'
நல்ல பாடம் படிக்'கலாம்'
நல்லறிவை வளர்க்'கலாம்..!'


தாய்த் தமிழை கற்'கலாம்'
தரணி போற்ற வாழலாம்
ஆங்கிலத்தைக் கற்'கலாம்'
அகிலம் முழுக்க சுற்றலாம்..!

கணக்குப் பாடம் கற்'கலாம்'
கணிதப் புலி ஆ'கலாம்'
அறிவியலைக் கற்'கலாம்'
அறிவில் சிறந்து நிற்'கலாம்..!'

வரலாற்றைப் படிக்'கலாம்'
முன்னோர் வழி நடக்'கலாம்'
புவியியலைப் படிக்'கலாம்'
புதியனவற்றைப் படைக்'கலாம்..!'

அறிவியல் தமிழ் கற்'கலாம்'
அண்டத்தை அறியலாம்
கணிப்பொறியைக் கற்'கலாம்'
புது கண்டுபிடிப்புகள் செய்யலாம்..!

இவைகளனைத்தும்
செய்து விட்டால் நாமும்
அப்துல் 'கலாம்' 'கலாம்'
நாடு போற்ற வாழலாம்..!

-மோ. கணேசன். 28.9.07
(27.10.2007 அன்று தினமணி - சிறுவர்மணியில் வெளிவந்த பாடல்)

எங்கள் நேரு மாமா! - குழந்தைப் பாடல்


இந்தியாவின் விடுதலைக்கு
முந்தி நின்ற வீரர்களில்
முன்னே நின்ற வீரராம்
எங்கள் நேரு மாமா...

விடுதலைக்குப் பின்
நாட்டின் முதல் பிரதமாராய்
ஆட்சி செய்த பிதாமகராம்
எங்கள் நேரு மாமா...

பார் போற்றும் காந்தியடிகளாரின்
நேர் கூற்று வாக்குப்படி
ஊர் போற்ற ஆட்சி செய்தவராம்
எங்கள் நேரு மாமா...

நம் நாட்டின் செல்வங்களை
வெள்ளையர்கள் திருடிச் சென்ற
வேதனைகளை துடைத்தவராம்
எங்கள் நேரு மாமா...

வறுமையில் சிக்கியிருந்தவர்களை
பொறுப்போடு காப்பாற்ற - புதுத்
தொழில் திட்டங்களை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா...

நம்மிடம் சண்டை போடும் நாடுகளை
நட்பு கொண்ட நாடுகளாய் மாற்ற
பஞ்ச சீலக் கொள்கை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா...

இந்தியாவின் இரும்புப் பெண்மணி
இந்திரா காந்தியை நமக்கு
வழங்கிட்ட வள்ளலாம்
எங்கள் நேரு மாமா...

குழந்தைகளின் நெஞ்சத்திலே
என்றும் பூத்திருக்கும்
இதயத்து ரோஜா மலராம்
எங்கள் நேரு மாமா...

- மோ. கணேசன்.
(10.11.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)
(நவம்பர் 14 பண்டித ஜவஹர்லால் நேருவின் 119 -வது பிறந்தநாள்)

யானையம்மா யானை..! - குழந்தைப் பாடல்


யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!

அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!

அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!

இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!

குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!

- மோ. கணேசன்.

மரம் வளர்ப்போம் வாருங்கள்! -குழந்தைப் பாடல்


மரம் வளர்ப்போம் வாருங்கள்
மாமழை பெறுவோம் வாருங்கள்
யாகம் வளர்த்தால் மழை வரும் என்ற
மடமையைப் போக்குவோம் வாருங்கள்!

யாகம் வளர்ப்பது மூடத்தனம்
மரம் வளர்ப்பது மூலதனம்
செடி கொடி வளர்த்துப் பாருங்கள்
வெம்மை நீங்கி வாழலாம்!

மக்கள் தொகை பெருக்கத்தால்
காட்டு வளங்கள் அழிகின்றன
காட்டு வளங்கள் அழிவதால்
கானல் வெப்பம் அதிகரிக்கும்!

வெப்பம் உலகில் அதிகரித்தால்
வேண்டா விளைவுகள் ஏற்படுமே
மழை நீர் மறைந்து போகும்
மனித இனம் அழிந்து போகும்!

வனவிலங்குகள் மாண்டு போகும்
புல் பூண்டுகள் தொலைந்து போகும்
பூமிப் பந்து நெருப்பாகும்
வேண்டாம் இந்த விபரீதம்!

புவியின் வெப்பம் தணிக்கவே
பூமியெங்கும் மரம் நடுவோம்
மழை வளம் காக்கவும் மனித வளம் காக்கவும்
மரம் வளர்ப்போம் வாருங்கள்!

-மோ. கணேசன்
(30.06.2007 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)

ஆலோலங்கிளி! - குழந்தைப் பாடல்

ஆலோலங்கிளி தோப்பிலே
அழகுக்கிளி வீட்டிலே!
ஆடுது பார் பைங்கிளி
பச்சைக்கிளி மூக்கிலே சிவப்பு நிறம் ஜொலிக்குதே!

பஞ்சவர்ணக் கிளியுண்டு
பச்சை நிறக் கிளியுண்டு
வெள்ளை நிறக் கிளியுண்டு
வெண்கொண்டையுள்ள கிளியுண்டு!

படகு போல சிறகுகளாம்
நீளமான இறகுகளாம்
குட்டியூண்டு கண்களாம்
குபீரென்று பறந்தோடுமாம்!

நெல், கம்பு தானியங்களை
நேர்த்தியாக உண்ணுமாம்
வளைந்திருக்கும் வாயாலே
வாகாய் பழங்களைத் தின்னுமாம்!

பிள்ளைகளுடன் விளையாடவே
கிள்ளை மொழி பேசுமாம்
மனிதருடன் பழகுமாம்
மானுடர் போலவே பேசுமாம்!

-மோ. கணேசன்
(30.09.2006 அன்று தினமணி - சிறுவர் மணியில் வெளிவந்த பாடல்)